"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/05/2013

மத்ஹபையாவது பின்பற்றுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (அல் குர்ஆன் 47 : 33)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல் குர்ஆன் 33 : 36)
திருக்குர்ஆன், மற்றும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல் ஆகிய இரண்டை மற்றும் பின்பற்றி வாழக்கூடியவன்தான் உண்மையான முஃமின் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்குப் போதிக்கின்றது. ஆனால் சத்தியத்தை மறந்து மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக்கிக் கொண்ட ஆலிம் பெருமக்களால் சமுதாயம் வழிகெடுக்கப்பட்டு மத்ஹபுகள் என்ற பெயராலும் தர்ஹா, தைக்காக்கள் என்ற பெயராலும் பல வகைகளில் வழிகெடுக்கின்றனர்.
ஓரிறைக் கொள்கைக்கு எதிரான தர்ஹா வழிபாடுகள் எல்லாம் உண்மையானதாகச் சித்தரிக்கப்பட்டு, இன்று இஸ்லாமிய சமுதாயம் நரகப்படுகுழிகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
யூத, நஸ்ரானிய அறிஞர்களைப் போன்று வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தைத் திரிக்கின்ற இந்த போலி மவ்லவிகள் மக்களை குருட்டுக் கூட்டங்களாய் மாற்றிவருகின்றனர்.
ஆனால் இவர்கள் எந்த மத்ஹபுகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களோ அந்த மத்ஹபுகளில் இடம் பெற்ற ஒரு சில சத்தியக் கருத்துக்களைக் கூட பின்பற்ற முன்வருவதில்லை.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாங்கள் கூறுகின்ற கருத்துக்களை நீங்கள் நம்பவில்லை என்றாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபு நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களையாவது அறிந்து, இந்த வழிகெடுக்கும் மவ்லவிகளை விட்டும் இணைவைக்கக் கூடிய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வீர்கள் என்ற நன்னோக்கத்தில் இந்தப் பிரசுரத்தை வெளியிடுகிறோம்.

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்து நம்மை ஆட்சி செய்கிறான்

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதை மத்ஹபை பின்பற்றும் சிலர் மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்றிருக்கும் தப்ஸீர்களிலேயே இக்கருத்து கூறப்பட்டுள்ளது.
ولم ينكر أحد من السلف الصالح أنه استوى على عرشه حقيقة. وخص العرش بذلك لأنه أعظم مخلوقاته, وإنما جهلوا كيفية الاستواء فإنه لا تعلم حقيقته. قال مالك رحمه الله: الاستواء معلوم - يعني في اللغة - والكيف مجهول, والسؤال عن هذا بدعة  (تفسير القرطبي)
அல்லாஹ் உண்மையாக அர்ஷில் அமர்ந்தான் என்பதை நல்லவர்களான முன்னோர்களில் (ஸஹாபாக்கள்) யாரும் மறுக்கவில்லை. இதன் மூலம் அர்ஷ் என்பது அல்லாஹ்வினுடைய படைப்புகளில் மிகப் பிரம்மாண்டமானது என்பது குறிப்பாகிறது. அவர்கள் (அல்லாஹ் எவ்விதத்தில்) அமர்ந்திருக்கிறான் என்பதை அறியவில்லை. ஏனெனில் அதனுடைய உண்மையான விதம் (குர்ஆனிலும், ஹதீஸிலும்) அறியப்படவில்லை. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : '' (அல்லாஹ் அர்ஷில்) அமர்ந்தான் என்பது அறியப்பட்டதாகும். எவ்விதத்தில் என்பது அறியப்படாததாகும்.  விதத்தை பற்றி கேட்பது ''பித்அத்'' ஆகும்.
(நூல் : தப்ஸீர் குர்துபி 7: 54 வசனத்தின் விரிவுரை)

அல்லாஹ் உருவமுள்ளவனா?

அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்ற கருத்து அல்குர்ஆன் 75 : 22, 23 மற்றும் புகாரி 7439, 4581 மற்றும் பல ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவனது தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். இவ்வுலகில் யாரும் அவனுக்கு தோற்றம் கற்பிக்கக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் ''அவனைப் போல் எதுவும் இல்லை.'' ''அவனுக்கு நிகராக யாருமில்லை''. இதுதான் உண்மையான இஸ்லாமியக் கொள்கையாகும். இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
وله يد ووجه ونفس فما ذكر الله في القرآن من ذكر الوجه واليد والنفس فهو ما ذكر له صفات بلاَ كيف ولا يقال إن يده قدرته ونعمته لأن فيه إبطال الصفة وهو قول أهل القدر والإعتزال (شرح فقه الأكبر 43- 44- 45)
அல்லாஹ்விற்கு  கையும், முகமும், ஆன்மாவும் உள்ளது.  தனக்கு முகம், கை, ஆன்மா இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது, (எப்படி என்று விளக்க முடியாகத வகையில்) விதமில்லாமல் அவனக்குரிய வர்ணைகளாகும். '' அல்லாஹ்வுடைய கை'' என்பதற்கு ''அவனுடைய வல்லமை''. ''அவனுடைய அருள்'' என்று கூறுவது கூடாது. ஏனெனில் இவ்வாறு விளக்கம் கொடுப்பது அவனுடைய வர்ணனைகளை அர்த்தமற்றதாக்குவதாகும். மேலும் இது கத்ரிய்யாக்கள், மற்றும் முஃதஸிலாக்களுடைய கூற்றாகும் என்று இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹனபி மத்ஹப் நூல் : ஷரஹ் ஃபிக்ஹ‎ýல் அக்பர் பக்கம் : 43, 44, 45)

தர்ஹா கட்டுவது கூடாது!

யூத கிறித்தவர்கள் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளுக்கு மேல் பள்ளிவாசல் கட்டவில்லை. மாறாக இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் கப்ரு வணங்கிகள் செய்து வருவதைப் போன்று கப்ருகளைத் தான் பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதை அந்த ஹதீஸிற்கு விளக்கமாக ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறக்கூடிய விளக்கம் தெளிவுபடுத்துகிறது.
قال الشافعي رحمه الله وأكره أن يعظم مخلوق حتى  يجعل قبره مسجدا مخافة الفتنة عليه وعلى من بعده من الناس  (المهذب ج: 1 ص: 138)
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை  நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!

ويكره أن يجصص القبر وأن يبنى عليه أو يعقد أو يكتب عليه ) المهذب ج: 1 ص: 138)
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
وإنما أحب أن يشخص على وجه الأرض شبرا أو نحوه وأحب أن لا يبنى ولا يجصص فإن ذلك يشبه الزينة والخيلاء وليس الموت موضع واحد منهما ولم أر قبور المهاجرين والأنصار مجصصة  قال الشافعي وقد رأيت من الولاة من يهدم بمكة ما يبنى فيها فلم أر الفقهاء يعيبون ذلك (الأم ج: 1 ص: 277)
கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. நான் மக்கமா நகரில் சில மன்னர்கள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல் : அல் உம்மு பாகம் : 1 பக்கம் : 277)
ويكره أن يزاد على التراب الذي أخرج من القبر لأن الزيادة عليه بمنزلة البناء ويستحب أن يحثى عليه التراب (البحر الرائق ج: 2 ص: 209)
கப்ரிலிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணை விட அதிகமான மண்ணை (வைத்து கப்ரை மூடுவது)  வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் கப்ரின் மீது மண்ணை அதிகரிப்பது அதனைக் கட்டுவதைப் போன்றதாகும்
(ஹனபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக்  பாகம் : 2  பக்கம் : 209)

கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!

كما يكره   تقبيل القبر  واستلامه وتقبيل الأعتاب عند الدخول لزيارة الأولياء فإن هذا كله من البدع التي ارتكبها الناس  (مغني المحتاج ج: 1 ص: 364)
கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காக செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்
(ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )

நபிமார்கள் மற்றும் அவ்லியாக்களின் பொருட்டால் வஸீலா தேடுவது கூடாது!


ويكره أن يقول الرجل في دعائه بحق فلان أو بحق أنبيائك ورسلك لأنه لاحق للمخلوق على الخالق (الهداية شرح البداية ج4/ص459)
ஒருவன் ''இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்'' என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு  எந்த அதிகாரமும் இல்லை
(ஹனஃபி மத்ஹப் நூல் : ஹிதாயா  பாகம் : 4 பக்கம் : 459)
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!
ويكفر لاعتقاده أن النبي يعلم الغيب (البحر الرائق ج: 3 ص: 94)
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)

இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்!

مطلب في سماع الميت الكلام  وأما الكلام فلأن المقصود منه الإفهام والموت ينافيه ( حاشية ابن عابدين ج: 3 ص: 836)
மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
وذلك لأن عائشة ردته بقوله تعالى وما أنت بمسمع من في القبور فاطر 22 إنك لا تسمع الموتى النمل 80  (حاشية ابن عابدين ج: 3 ص: 836)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ரலி) அவர்கள் 'உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் '' உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது '' (27 : 80)  ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)
இறந்தவர் பெயரில் ஃபாத்திஹா ஓதி பார்சல் செய்ய முடியாது!
ومن هذه الآية الكريمة استنبط الشافعي رحمه الله ومن اتبعه أن القراءة لا يصل إهداء ثوابها إلى الموتى لأنه ليس من عملهم ولا كسبهم ولهذا لم يندب إليه رسول الله  صلى الله عليه وسلم  أمته ولا حثهم عليه ولا أرشدهم إليه بنص ولا إيماء ولم ينقل ذلك عن أحد من الصحابة رضي الله عنهم ولو كان خيرا لسبقونا إليه (تفسير ابن كثير ج4/ص259)
"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53 : 39) இந்த திருவசனத்திலிருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள் : '' குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது  (மறைமுகமான) சுட்டிக்காட்டுதலின் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள். 
(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் 53 : 39 வசனத்தின் விரிவுரை)

ஜ‎ýம்ஆவிற்கு ஒரு பாங்குதான்

أخبرنا الربيع قال أخبرنا الشافعي قال أخبرني الثقة عن الزهري عن السائب بن يزيد أن الأذان كان أوله للجمعة حين يجلس الإمام على المنبر على عهد رسول الله  صلى الله عليه وسلم  وأبى بكر وعمر فلما كانت خلافه عثمان وكثر الناس أمر عثمان بأذان ثان فأذن به فثبت الأمر على ذلك   قال الشافعي   وقد كان عطاء ينكر أن يكون عثمان أحدثه ويقول أحدثه معاوية والله تعالى إعلم   قال الشافعي   وأيهما كان فالأمر الذي على عهد رسول الله  صلى الله عليه وسلم  أحب إلى (الأم ج1/ص195)
ஸாயிப் பின் யஸீத் (ரலி) அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ர் (ரலி), மற்றும் உமர் (ரலி) அவர்களுடைய காலத்திலும் இமாம் மிம்பரில் அமரும்போது சொல்லப்படுகின்ற முதல் பாங்குதான் ஜ‎ýம்ஆவிற்குரிய பாங்காக இருந்தது. உஸ்மானுடைய ஆட்சிக்காலம் ஏற்பட்டபோது, மக்கள் அதிகமானார்கள். எனவே உஸ்மான் இரண்டாவது அறிவிப்பை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அது அறிவிக்கப்பட்டது. இவ்வாறே அக்காரியம் நிலைபெற்று விட்டது.
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் '' அதாவு என்ற அறிஞர் உஸ்மான் (ரலி) அவர்கள்தான் இதனை புதிதாக உருவாக்கினார் என்பதை மறுத்து, முஆவியா (ரலி) அவர்கள்தான் இதனை புதிதாக உருவாக்கினார் என்று கூறியுள்ளார். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
மேலும் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள் : எது எப்படி இருந்தாலும் நபி (ஸல்) அவர்களூடைய காலத்தில் இருந்த (ஒரு பாங்கு கூறும்) முறைதான் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.
(ஷாஃபி இமாம் அவர்கள் தொகுத்த நூல், அல்உம்மு பாகம் : 1 பக்கம் 195)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்